Thursday, 12 August 2010

அப்புறம் பார்த்துக்கலாம்

         நம்மில் பலருக்கு அந்தப் பழக்கம் இருக்கிறது. 'அப்புறம் பார்த்துக்கலாம்' என்று தள்ளிப் போட்டுக்கொண்டே வந்த வேலை ஒன்று, அதன் டெட்லைன் நெருக்கடியில் வந்து நம் கழுத்தை நெரிக்கும். அப்போதைக்கு அந்த வேலையைக் காட்டிலும் முக்கியமான வேலைகள் இருந்தாலும், முடித்தாக வேண்டிய கட்டாயம் இருப்பதால், இந்த வேலையைச் செய்ய வேண்டிய நிர்ப்பந்தம் நமக்கு. செமஸ்டருக்குப் படிப்பது, கடைசிக் கெடு தேதியில் இ.பி பில் கட்ட வரிசையில் நிற்பது, இன்டர்வியூ தின காலையில் சட்டையை அயர்ன் செய்ய அலைந்துகொண்டு இருப்பது, ஒரு முழு மாதத்தையும் உதாசீனப்படுத்திவிட்டு ஞாயிற்றுக்கிழமை சாயங்காலம் மாங்குமாங்கென்று அசைன்மென்ட் எழுதிக்கொண்டு இருப்பது என அடுக்கிக்கொண்டே போகலாம்.
           பி.எஸ்.எல்.வி. ராக்கெட் குறிப் பிட்ட தினத்தில் ஏவப்பட வேண்டும் என்றால், அதன் ஆரம்பக்கட்டப் பணிகளை ஏவும் தினத்தன்று காலையில் ஆரம்பிக்க மாட்டார்கள். சில வருடங்களுக்கு முன் திட்டமிட்டு, சில மாதங்களுக்கு முன் ராக்கெட்டை நிலைநிறுத்தி, சில வாரங்களுக்கு முன் கவுன்ட் டவுன் துவக்கி எனப் பரபரத்துக்கொண்டு இருப்பார்கள். 'லட்சியங்களை எட்டிப் பிடிக்கத் துடிக்கும் நாம் ஒவ்வொருவரும் ஒரு ராக்கெட்தானே! பிறகு ஏன், நாம் மட்டும் முன் கூட்டியே திட்டமிடத் தவறுகிறோம்?' 
இன்று என்ன செய்ய வேண்டும்?
இன்றே, இப்போதே செய்ய வேண்டிய வேலை என்ன? உங்களது நாளைய தினம் சிறப்பாக இருக்க, இன்று என்ன செய்ய வேண்டுமோ, அதை இன்றே, இப்போதே செய்துமுடியுங்கள்! கல்லூரிக்குச் செல்கிறோம். மறுநாள் வகுப்புத் தேர்வுக்கான நோட்ஸ் எடுக்கலாம், அடுத்த மாத கல்ச்சுரல் போட்டிகளுக்கான நடன ஒத்திகையில் ஈடுபடலாம், மாவட்ட அளவிலான பேஸ்கட்பால் போட்டிக்குப் பயிற்சி எடுக்கலாம். ஆனால், இவற்றை விட்டுவிட்டு கேன்டீன் டீ கிளாஸைக் கைகளில் உருட்டிய படி வெட்டி அரட்டையில் ஈடுபட்டு இருப்போம். அப்படியே டைம் மெஷினில் ஏறிச் சில நாட்கள் முன் சென்று பாருங்கள்... வகுப்புத் தேர்வில் பதில் தெரியாமல் முழித்துக்கொண்டோ, கல்ச்சுரல் போட்டி அன்று போதிய பயிற்சி இல்லாத பதற்றத்துடன் மேடையில் தட்டுத் தடுமாறிக்கொண்டோ, மாவட்டப் போட்டியின் இறுதிச் சுற்றில் மிகச் சில புள்ளிகள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்து, 'ச்சே! பாஸிங் கொஞ்சம் நல்லா பண்ணியிருந்தா ஈஸியா அடிச்சுருக்கலாம்டா அவனுங்களை!' என்று சலித் துக்கொண்டோ அமர்ந்து இருப்போம். தொலைநோக்குப் பார்வை என்பது எல்லாம் அடுத்த ஐந்து வருடங்களைக் கணக்கிட்டுத் திட்டமிட்டுச் செயல்படுவதல்ல; நாளை காலையில் நிம்மதியான மன நிலையில் எழுவதற்கு இன்று என்ன செய்ய வேண்டும் என்று திட்டமிடுவது!
பள்ளி, கல்லூரி, அலுவலகம், வீடு என எந்தச் சூழலிலும் அன்றே செய்து முடிக்க வேண்டிய அவசிய வேலைகள் என்று சில இருக்கும். அதை முதலில் முடித்துவிட்டு, அடுத்தகட்டத்துக்குப் பயணம் செய்யுங்கள்.
நான் ரொம்ப பிஸியாக்கும்...
சச்சின் டெண்டுல்கர், ஏ.ஆர்.ரஹ்மான், ராகுல் காந்தி, மு.க.ஸ்டாலின் ஆகியோரைப் பாருங்கள். எப்போதும் சாந்தமான, அமைதி தவழும் முகத்தோடு, துளிப் பரபரப்பும் காட்டாமல் வளைய வந்துகொண்டு இருப்பார்கள். நம்மில் பலருக்கு அவர்களைக் காட்டிலுமா அதிக அளவில் வேலைப் பளு குவிந்துகிடக்கிறது? ஆனால், 'பிஸி... பிஸி!' என்று பந்தா பண்ணிக்கொண்டு ஓடிக்கொண்டே இருப்போம். உண்மையைச் சொல்ல வேண்டும் என்றால், தனது நேரத்தை நிர்வகிக்கத் தெரியாதவர்கள்தான் 'பிஸி... பிஸி' என்று காலில் தேவை இல்லாத சக்கரத்தைக் கட்டிக்கொண்டு ஓடுவார்கள். படிப்புக்கு, அலுவலகத்துக்கு எந்த அளவு நேரம் ஒதுக்குகிறோமோ, அதே அளவுக்கு குடும்பத்துக்கும் நேரம் ஒதுக்க வேண்டும். வீட்டுக்கு வந்த பிறகும் அலுவல் நினைவுகளில் பதற்றம் காட்டிக்கொண்டே இருப்பதோ, 'ரொம்ப டென்ஷனா இருக்கு. நான் டி.வி. பார்க்கிறேன். தொந்தரவு பண்ணாதீங்க!' என்று குடும்ப உறுப்பினர்களிடம் வள்ளென்று விழுவதோ... உங்களை எந்தவிதத்திலும் ஒரு முழு மனிதனாக மாற்றாது. 'எப்போதும் பரபரப்பாக இருப்பவர்களைத்தான் இந்தச் சமூகம் மதிக்கும்!' என்ற நினைப்பு நம்மவர்கள் மனங்களில் ஊறித் திளைப்பதும் இந்த மனநிலைக்கு ஒரு காரணம். விசேஷங்களுக்கு வந்த இடத்திலும் செல்போனில் அலுவலக ஊழியர்களைத் திட்டி விரட்டிக்கொண்டு இருப்பார்கள் பலர். அது, சம்பந்தப்பட்டவர்களின் இயலாமையைத்தான் வெளிப்படுத்துவதாக அமையும். 'என்னால் எந்த வேலையையும் நினைச்ச மாதிரி செய்ய முடியலை!' என்ற பலவீனத்தைப் பூசி மெழுகும் வார்த்தைதான் 'பிஸி'. இனிமேலாவது எதையும் பூசி மெழுகாமல் இருப்போமே!
தினமும் என்னைக் கவனி!
எந்த வேலையில், எந்த சூழலில் இருந்தாலும் அனைவரும் கடைப்பிடிக்க வேண்டிய சில தினசரி நடவடிக்கைகள்...
ஏதேனும் ஒரு வேலையில் ஈடுபட்டு இருக்கும்போது, ஒரு எஸ்.எம்.எஸ். அல்லது இ-மெயில் வந்தால், செய்துகொண்டு இருக்கும் வேலையில் இருந்துகவனத்தைத் திசை திருப்பா தீர்கள்!
உடனடியாக முடிவு எடுக்க வேண்டிய சின்னச் சின்ன விஷயங்கள் மீது உடனே முடிவு எடுத்துத் தீர்த்துவையுங்கள். சின்னச் சின்ன விஷயங்களாகத் தேங்குவதுதான், பிறகு நம்மை மலைக்கவைத்துவிடும்!
அவசியம், அவசரம் என்றால் மட்டும் அலுவல் நேரங்களில் செல்போன் பயன்படுத்துங்கள்!
12 நபர்களுக்கு மேல் கலந்துகொள்ளும் மீட்டிங் என்றால், முடிந்த மட்டும் புறக்கணிக்கப் பாருங்கள். அங்கு எந்த முழுமையான முடிவுகளும் எடுக்கப்பட மாட்டாது. உங்கள் நேரம்தான் காற்றில் கரைந்து இருக்கும்!
அன்றைய தினம் முடித்தே ஆக வேண்டிய வேலைகளை, சின்னச் சின்னக் குறிப்புகளாக எழுதிக் கண்ணில் படும் இடத்தில் வைத்துக்கொள்ளுங்கள். அதிலும் வேலையின் முக்கியத்துவத்துக்கு ஏற்ப A,B,C என அதன் அருகில் குறித்து வைத்துக்கொள்ளுங்கள். A வேலைகள் முடிய முடிய B,C என்று தாவி ஓடிக்கொண்டே இருங்கள்.
உங்கள் 'நாளை' நலமாக இருக்க வாழ்த்துக்கள்!

No comments:

Post a Comment