Thursday, 26 August 2010

காயத்ரி மந்திரம்

காயத்ரி மந்திரம் மருத்துவரீதில் சிறந்தது தான்

                  விஞ்ஞான ரீதியில் பார்த்தாலும் இது மிகப் பெரும் உடற்பயிற்சி தான்.
விளக்கம் அடியில் இருக்கிறது.

ஓம் பூர் புவ: ஸுவ:
தத் ஸவிதுர் வரேண்யம்
பர்கோ தேவஸ்ய தீமஹி
தியோ யோன: ப்ரசோதயாத்


என்று ஆரம்பிக்கும் இம் மந்திரத்தில் ஏதோ சக்தி இருக்கிறது என்பதை கட்டாயம் ஏற்றுக் கொண்டே ஆக வேண்டும். இதை முறையாக ஒரு முறை செய்து பார்த்தால் வாழ்வில் வரும் மாற்றங்களை வைத்து நீங்கள் உணரலாம். சமைப்பதென்றால் கூட ஒரு முறையிருக்கிறதல்லவா. அப்படித்தான் இதுவும். இதற் கென்றொரு முறையிருக்கிறது.

இம் மந்திரத்தை விசுவாமித்திர முனிவர் இயற்றியதாகக் கூறப்படும் (ரிக் வேதத்தின் ) மூன்றாவது மண்டலத்தில் (3.62.10 உள்ள ஒரு அருட்பாடல் காயத்திரி மந்திரம் ஆகும். என்று அழைக்கிறார்கள்.

இனி ஓதும் முறையைப் பார்ப்போமா? முதலில் உடல் சுத்தமாக இருக்க வேண்டும். ஒரு தூய இடமொன்றில் நின்றபடியோ அல்லது சப்பாணியிட்டோ அமர்ந்து ஓத வேண்டும்.

தொடங்கும் முன் ஓம்…….ஓம்………ஓம்…… என பிரணவ மந்திரத்தை 3 தரம் சொல்லித் தொடங்க வேண்டும்.
பின் மந்திரத்தை கீழ் சொன்னது போன்று கூற வேண்டும்.

மூச்சை உள்ளெடுத்துக் கொண்டு
ஓம் பூர் புவ: ஸுவ என்ற வரியை சொல்ல வேண்டும்.

பின் மூச்சை தம் கட்டிக் கொண்டு
தத் ஸவிதுர் வரேண்யம் என்ற வரியை சொல்ல வேண்டும்.

பின் மூச்சை வெளிவிட்டபடி
பர்கோ தேவஸ்ய தீமஹி என்ற வரியை சொல்ல வேண்டும்

இறுதியாக சுவாசத்தை நிறுத்தி
தியோ யோன: ப்ரசோதயாத் என்ற வரியை சொல்ல வேண்டும்.

இப்படி 108 தரம் சொல்ல வேண்டும். முடிக்கையிலும் பிரணவ மந்திரம் சொல்லித்தான் முடிக்கணும்.

இதன் விஞ்ஞான காரணம் பார்த்தால் முக்கியம் மூச்சு பயிற்சி தான் இங்கு நான் தென்கச்சி கோ. சுவாமிநாதன் ஐயா சொன்னதை சொல்கிறேன். “நாம் எவ்வளவுக்கெவ்வளவு குறைவாக சுவாசிக்கிறோமோ அவ்வளவுக்கவ்வளவு அதிக காலம் அதிகமாக உயிர் வாழலாம். உதாரணமாக ஆமைகள் நிமிடத்திற்கு 4 தரம் சுவாசிப்பதால் தான் 500 ஆண்டுகள் வாழ்கிறது” என்கிறார். இதையும் விஞ்ஞானம் தான் சொல்லியிருக்கிறது.

Thursday, 12 August 2010

அப்புறம் பார்த்துக்கலாம்

         நம்மில் பலருக்கு அந்தப் பழக்கம் இருக்கிறது. 'அப்புறம் பார்த்துக்கலாம்' என்று தள்ளிப் போட்டுக்கொண்டே வந்த வேலை ஒன்று, அதன் டெட்லைன் நெருக்கடியில் வந்து நம் கழுத்தை நெரிக்கும். அப்போதைக்கு அந்த வேலையைக் காட்டிலும் முக்கியமான வேலைகள் இருந்தாலும், முடித்தாக வேண்டிய கட்டாயம் இருப்பதால், இந்த வேலையைச் செய்ய வேண்டிய நிர்ப்பந்தம் நமக்கு. செமஸ்டருக்குப் படிப்பது, கடைசிக் கெடு தேதியில் இ.பி பில் கட்ட வரிசையில் நிற்பது, இன்டர்வியூ தின காலையில் சட்டையை அயர்ன் செய்ய அலைந்துகொண்டு இருப்பது, ஒரு முழு மாதத்தையும் உதாசீனப்படுத்திவிட்டு ஞாயிற்றுக்கிழமை சாயங்காலம் மாங்குமாங்கென்று அசைன்மென்ட் எழுதிக்கொண்டு இருப்பது என அடுக்கிக்கொண்டே போகலாம்.
           பி.எஸ்.எல்.வி. ராக்கெட் குறிப் பிட்ட தினத்தில் ஏவப்பட வேண்டும் என்றால், அதன் ஆரம்பக்கட்டப் பணிகளை ஏவும் தினத்தன்று காலையில் ஆரம்பிக்க மாட்டார்கள். சில வருடங்களுக்கு முன் திட்டமிட்டு, சில மாதங்களுக்கு முன் ராக்கெட்டை நிலைநிறுத்தி, சில வாரங்களுக்கு முன் கவுன்ட் டவுன் துவக்கி எனப் பரபரத்துக்கொண்டு இருப்பார்கள். 'லட்சியங்களை எட்டிப் பிடிக்கத் துடிக்கும் நாம் ஒவ்வொருவரும் ஒரு ராக்கெட்தானே! பிறகு ஏன், நாம் மட்டும் முன் கூட்டியே திட்டமிடத் தவறுகிறோம்?' 
இன்று என்ன செய்ய வேண்டும்?
இன்றே, இப்போதே செய்ய வேண்டிய வேலை என்ன? உங்களது நாளைய தினம் சிறப்பாக இருக்க, இன்று என்ன செய்ய வேண்டுமோ, அதை இன்றே, இப்போதே செய்துமுடியுங்கள்! கல்லூரிக்குச் செல்கிறோம். மறுநாள் வகுப்புத் தேர்வுக்கான நோட்ஸ் எடுக்கலாம், அடுத்த மாத கல்ச்சுரல் போட்டிகளுக்கான நடன ஒத்திகையில் ஈடுபடலாம், மாவட்ட அளவிலான பேஸ்கட்பால் போட்டிக்குப் பயிற்சி எடுக்கலாம். ஆனால், இவற்றை விட்டுவிட்டு கேன்டீன் டீ கிளாஸைக் கைகளில் உருட்டிய படி வெட்டி அரட்டையில் ஈடுபட்டு இருப்போம். அப்படியே டைம் மெஷினில் ஏறிச் சில நாட்கள் முன் சென்று பாருங்கள்... வகுப்புத் தேர்வில் பதில் தெரியாமல் முழித்துக்கொண்டோ, கல்ச்சுரல் போட்டி அன்று போதிய பயிற்சி இல்லாத பதற்றத்துடன் மேடையில் தட்டுத் தடுமாறிக்கொண்டோ, மாவட்டப் போட்டியின் இறுதிச் சுற்றில் மிகச் சில புள்ளிகள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்து, 'ச்சே! பாஸிங் கொஞ்சம் நல்லா பண்ணியிருந்தா ஈஸியா அடிச்சுருக்கலாம்டா அவனுங்களை!' என்று சலித் துக்கொண்டோ அமர்ந்து இருப்போம். தொலைநோக்குப் பார்வை என்பது எல்லாம் அடுத்த ஐந்து வருடங்களைக் கணக்கிட்டுத் திட்டமிட்டுச் செயல்படுவதல்ல; நாளை காலையில் நிம்மதியான மன நிலையில் எழுவதற்கு இன்று என்ன செய்ய வேண்டும் என்று திட்டமிடுவது!
பள்ளி, கல்லூரி, அலுவலகம், வீடு என எந்தச் சூழலிலும் அன்றே செய்து முடிக்க வேண்டிய அவசிய வேலைகள் என்று சில இருக்கும். அதை முதலில் முடித்துவிட்டு, அடுத்தகட்டத்துக்குப் பயணம் செய்யுங்கள்.
நான் ரொம்ப பிஸியாக்கும்...
சச்சின் டெண்டுல்கர், ஏ.ஆர்.ரஹ்மான், ராகுல் காந்தி, மு.க.ஸ்டாலின் ஆகியோரைப் பாருங்கள். எப்போதும் சாந்தமான, அமைதி தவழும் முகத்தோடு, துளிப் பரபரப்பும் காட்டாமல் வளைய வந்துகொண்டு இருப்பார்கள். நம்மில் பலருக்கு அவர்களைக் காட்டிலுமா அதிக அளவில் வேலைப் பளு குவிந்துகிடக்கிறது? ஆனால், 'பிஸி... பிஸி!' என்று பந்தா பண்ணிக்கொண்டு ஓடிக்கொண்டே இருப்போம். உண்மையைச் சொல்ல வேண்டும் என்றால், தனது நேரத்தை நிர்வகிக்கத் தெரியாதவர்கள்தான் 'பிஸி... பிஸி' என்று காலில் தேவை இல்லாத சக்கரத்தைக் கட்டிக்கொண்டு ஓடுவார்கள். படிப்புக்கு, அலுவலகத்துக்கு எந்த அளவு நேரம் ஒதுக்குகிறோமோ, அதே அளவுக்கு குடும்பத்துக்கும் நேரம் ஒதுக்க வேண்டும். வீட்டுக்கு வந்த பிறகும் அலுவல் நினைவுகளில் பதற்றம் காட்டிக்கொண்டே இருப்பதோ, 'ரொம்ப டென்ஷனா இருக்கு. நான் டி.வி. பார்க்கிறேன். தொந்தரவு பண்ணாதீங்க!' என்று குடும்ப உறுப்பினர்களிடம் வள்ளென்று விழுவதோ... உங்களை எந்தவிதத்திலும் ஒரு முழு மனிதனாக மாற்றாது. 'எப்போதும் பரபரப்பாக இருப்பவர்களைத்தான் இந்தச் சமூகம் மதிக்கும்!' என்ற நினைப்பு நம்மவர்கள் மனங்களில் ஊறித் திளைப்பதும் இந்த மனநிலைக்கு ஒரு காரணம். விசேஷங்களுக்கு வந்த இடத்திலும் செல்போனில் அலுவலக ஊழியர்களைத் திட்டி விரட்டிக்கொண்டு இருப்பார்கள் பலர். அது, சம்பந்தப்பட்டவர்களின் இயலாமையைத்தான் வெளிப்படுத்துவதாக அமையும். 'என்னால் எந்த வேலையையும் நினைச்ச மாதிரி செய்ய முடியலை!' என்ற பலவீனத்தைப் பூசி மெழுகும் வார்த்தைதான் 'பிஸி'. இனிமேலாவது எதையும் பூசி மெழுகாமல் இருப்போமே!
தினமும் என்னைக் கவனி!
எந்த வேலையில், எந்த சூழலில் இருந்தாலும் அனைவரும் கடைப்பிடிக்க வேண்டிய சில தினசரி நடவடிக்கைகள்...
ஏதேனும் ஒரு வேலையில் ஈடுபட்டு இருக்கும்போது, ஒரு எஸ்.எம்.எஸ். அல்லது இ-மெயில் வந்தால், செய்துகொண்டு இருக்கும் வேலையில் இருந்துகவனத்தைத் திசை திருப்பா தீர்கள்!
உடனடியாக முடிவு எடுக்க வேண்டிய சின்னச் சின்ன விஷயங்கள் மீது உடனே முடிவு எடுத்துத் தீர்த்துவையுங்கள். சின்னச் சின்ன விஷயங்களாகத் தேங்குவதுதான், பிறகு நம்மை மலைக்கவைத்துவிடும்!
அவசியம், அவசரம் என்றால் மட்டும் அலுவல் நேரங்களில் செல்போன் பயன்படுத்துங்கள்!
12 நபர்களுக்கு மேல் கலந்துகொள்ளும் மீட்டிங் என்றால், முடிந்த மட்டும் புறக்கணிக்கப் பாருங்கள். அங்கு எந்த முழுமையான முடிவுகளும் எடுக்கப்பட மாட்டாது. உங்கள் நேரம்தான் காற்றில் கரைந்து இருக்கும்!
அன்றைய தினம் முடித்தே ஆக வேண்டிய வேலைகளை, சின்னச் சின்னக் குறிப்புகளாக எழுதிக் கண்ணில் படும் இடத்தில் வைத்துக்கொள்ளுங்கள். அதிலும் வேலையின் முக்கியத்துவத்துக்கு ஏற்ப A,B,C என அதன் அருகில் குறித்து வைத்துக்கொள்ளுங்கள். A வேலைகள் முடிய முடிய B,C என்று தாவி ஓடிக்கொண்டே இருங்கள்.
உங்கள் 'நாளை' நலமாக இருக்க வாழ்த்துக்கள்!

Tuesday, 10 August 2010

ஆரோக்கியமான உடல்நலத்திற்க்கு அழகிய TIPS

ஆரோக்கியம் / உடல் நலம்

1. தண்ணீர் நிறைய குடியுங்கள்.

2. காலை உணவு ஒரு அரசன்/அரசி போலவும், மதிய உணவு ஒரு இளவரசன்/இளவரசி போலவும், இரவு உணவை யாசகம் செய்பவனைப் போலவும் உண்ண வேண்டும்.

3. இயற்கை உணவை, பழங்களை அதிகமாக எடுத்துக் கொண்டு,பதப் படுத்தப்பட்ட உணவை தவிர்த்துவிடுங்கள்.

4. உடற்பயிர்ச்சி மற்றும் பிரார்த்தனைக்கு நேரம் ஒதுக்குங்கள்.

5. தினமும் முடிந்த அளவு விளையாடுங்கள்.

6. 2009விட இந்த வருடம் நிறைய புத்தகம் படியுங்கள்.

7. ஒரு நாளைக்கு 10 நிமிடம் தனிமையில் அமைதியாக இருங்கள்.

8. குறைந்தது 7 மணி நேரம் தூங்குங்கள்.

9. குறைந்தது 10 நிமிடம் முதல் 30 நிமிடம் வரை நடைப் பயிற்சி மேற்கொள்ளுங்கள்.



தன்னம்பிக்கை / சுயமுன்னேற்றம்



10. உங்களை ஒருபொழுதும் மற்றவருடன் ஒப்பிடாதீர்கள். அவர்கள் பயணிக்கும் / மேற்கொண்டிருக்கும் பாதை வேறு. உங்கள் பாதை வேறு.

11. எதிர்மறையான எண்ணங்களை எப்பொழுதும் மனதில் நினைக்காதீர்கள்.

12. உங்களால் முடிந்த அள்வு வேலை செய்யுங்கள். அளவுக்கு மீறி எதையும் செய்யாதீர்கள்.

13. மற்றவர்களைப் பற்றிப் புறம் பேசுவதில் உங்கள் சக்தியை வீணாக்காதீர்கள்.

14. நீங்கள் விழித்திருக்கும் பொழுது எதிர்காலத்தைப் பற்றி நிறைய கணவு காணுங்கள்.

15. அடுத்தவரைப் பார்த்து பொறாமை கொள்வது நேர விரையம். உங்களுக்கு தேவையானது உங்களிடம் உள்ளது.

16. கடந்த காலத்தை மறக்க முயற்சி செய்யுங்கள். கடந்த காலம் உங்கள் நிகழ்காலத்தை சிதைத்துவிடும்.

17. வாழும் இந்த குறுகிய காலத்தில் யாரையும் வெறுக்காதீர்கள்.

18. எப்பொழுதும் மகிழ்சியாக இருக்க கற்றுக் கொள்ளுங்கள்.

19. வாழ்க்கை ஒரு பள்ளிக்கூடம். நீங்கள் கற்றுக் கொள்ள வந்திருக்கிறீர்கள். சிக்கல்களும், பிரச்சனைகளும் இங்கு பாடங்கள்.

20. முடியாது என்று சொல்லவேண்டிய இடங்களில் தயவு செய்து முடியாது என்று சொல்லுங்கள். இது பல பிரச்சனைகளை ஆரம்பதிலே தீர்த்துவிடும்.



சமூகம்.



21. வெளிநாட்டிலோ வெளியூரிலோ இருந்தால் குடும்பத்தில் இருப்பவர்களுக்கும், நண்பர்களுக்கும், வேண்டியவர்களுக்கும் அடிக்கடி தொலைபேசியிலோ, கடிதம் மூலமாகவோ தொடர்புகொண்டிருங்கள்.

22. மன்னிக்கப் பழகுங்கள்.

23. 70 வயதிற்கு மேலிருப்பவர்களையும், 6 வயதிற்கு கீழிருப்பவர்களையும் கவனிக்க நேரம் ஒதுக்குங்கள்.

24. அடுத்தவர்கள் என்ன நினைப்பார்களோ என்பதைப் பற்றி ஒருபொழுதும் கவலை கொள்ளாதீர்கள்.

25. உங்கள் நண்பர்களை மதிக்கப் பழகுங்கள்.



வாழ்க்கை



26. உங்கள் மனதிற்கு எது சரியென்று படுகிறதோ அதை உடனே செய்யுங்கள்.

27. ஒவ்வொரு நாளும் இறைவனுக்கு நன்றி சொல்லுங்கள்.

28. உங்கள் ஆழ்மனதில் இருப்பது சந்தோஷம் தான். அதை தேடி அனுபவித்துக் கொண்டே இருங்கள்.

29. உங்களுக்கு எது சந்தோஷத்தை கொடுக்காதோ, எது அழகை கொடுக்காதோ, நிம்மதியைக் கொடுக்காதோ அதை நீக்கிவிடுங்கள்.

30. எந்த சூழ்நிலையும் ஒரு நாள் கண்டிப்பாக மாறும்.

வெற்றி

           ஒரு நகரத்திற்கு சட்டமிருந்தது. அதன்படி யார் வேண்டுமென்றாலும் அந்த நகரத்திற்கு ராஜாவாக வரமுடியும். ஆனால், அந்தப் பதவி ஐந்தாண்டுகள் மட்டுமே! ஐந்தாண்டு முடிந்த அடுத்த நாளே மன்னனை ஆற்றின் கரைக்கு மறுபுறம் உள்ள காட்டில் விட்டுவிடுவார்கள்.
          அந்தக் காட்டில் மனிதர்கள் கிடையாது. வெறும் கொடிய விலங்குகள் மட்டுமே! மன்னன் காட்டிற்குள் நுழைந்தால் போதும்; வனவிலங்குகள் கொன்று தீர்த்துவிடும். இந்த சட்டத்தை யாராலும் மாற்ற இயலாது. இந்த நிபந்தனைகளுக்கு ஒப்புக் கொண்டவன் மட்டுமே அரியணையில் அமரப் பொருத்தமானவன். ஆக, மன்னனாக முடிசூட்டிக் கொண்டவனின் தலையெழுத்து, ஐந்தாண்டுகளுக்குப் பின் கட்டாய மரணம். இந்தக் கடுமையான சட்டத்துக்கு பயந்தே யாரும் அந்தப் பதவிக்கு ஆசைபடாமலிருந்ததால் அந்த அரியணை பெரும்பாலும் காலியாகவே இருந்தது. இருப்பினும் ஒரு சிலர் 'எப்படியிருந்தாலும் சாகத்தானே போகிறோம்; மன்னனாகவே மடியலாமே!' என்று பதவி ஏற்பதுண்டு. அதிலும் பாதி மன்னர்கள் இடையிலேயே மாரடைப்பால் மரணமடைவதுமுண்டு.
            இப்படி ஒரு மன்னனுக்கு ஐந்து ஆண்டு ஆட்சிக்காலம் முடிந்தது. அன்று ஆற்றின் கரையைக் கடந்து காட்டிற்குச் செல்ல வேண்டும். அவனை வழியனுப்ப நாடே திரண்டிருந்தது. மன்னன் வந்தான், அவனுடைய சிறப்பான ஆடைகளையும் நகைகளையும் அணிந்து, முடிசூடி, தங்க வாளேந்தி வைரங்கள் மின்ன மக்கள் முன் நின்றான். மக்கள் வாயைப் பிளந்தனர் ''இன்னும் அரை மணிநேரத்தில் சாகப் போகிறான் ; அதற்கு இவ்வளவு அலங்காரமா!'' தான் செல்லவிருந்த படகைப் பார்த்துவிட்டு சினத்துடன் கூறினான், ''மன்னன் செல்லும் படகா இது ! பெரிய படகைக் கொண்டு வாருங்கள்! நான் நின்றுகொண்டா செல்வது! சிம்மாசனத்தைக் கொண்டு
வாருங்கள்!''
           கட்டளைகள் பறந்தன; காரியங்கள் நடந்தன! சற்று நேரத்தில் அலங்கரிக்கப்பட்ட அழகான படகு ஆற்று நீரைத் கிழித்துக் கொண்டு மறுகரை நோக்கிப் பயணித்தது. மக்கள் திகைத்து நிற்க, மன்னன் கையசைக்க பயணம் தொடர்ந்தது. மிகவும் அதிர்ச்சியடைந்தவன் படகோட்டியே! காரணம், இதுவரை அவன் மறுகரைக்கு அழைத்துச் சென்ற எந்த மன்னனும் மகிழ்ச்சியாக சென்றதில்லை. அழுது புலம்பி, புரண்டு, வெம்பிச் செல்வார்கள். இவனோ, மகிழ்ச்சிக் களிப்பில் பொங்கி வழிகிறான்.
       படகோட்டி பொறுத்துக்கொள்ள முடியாமல் கேட்டான் ''மன்னா! எங்கே செல்கிறீர்கள் தெரியுமா?''
''தெரியும் மறுகரைக்குச் செல்கிறேன்!''

''அங்கே சென்றவர்கள் திரும்ப இந்த நகரத்திற்கு வந்ததில்லை தெரியுமா?''

''தெரியும். நானும் திரும்ப இந்த நகரத்திற்கு வரப் போவதில்லை!''

''பின்னே எப்படி உங்களால் இவ்வளவு மகிழ்ச்சியாக இருக்க முடிகிறது?''

       ''அதுவா! நான் என்ன செய்தேன் தெரியுமா? ஆட்சிக்கு வந்த ஓராண்டு முடிவில் ஆயிரம் வேட்டைக்காரர்களைக் காட்டிற்கு அனுப்பினேன்; அவர்கள் கொடிய விலங்குகளை வேட்டையாடிக் கொன்று விட்டார்கள்!. இரண்டாமாண்டு முடிவில் ஆயிரம் விவசாயிகள் சென்றார்கள்; காட்டைத் திருத்தி உழுதார்கள்; இன்று ஏராளமான தானியங்கள் காய்கறிகள். மூன்றாமாண்டு முடிவில் ஆயிரம் கட்டடக்கலை வல்லுநர்கள், தொழிலாளர்கள் சென்றனர். இன்று வீடு, வாசல், அரண்மனை, அந்தப்புரம், சாலைகள் எல்லாம் தயார்! நான்காம் ஆண்டு முடிவில் ஆயிரம் அரசு அதிகாரிகள் சென்றனர். நிர்வாகம் சீரடைந்தது. இந்த 4000 பேரும் தங்கள் மனைவி, குழந்தைகளுடன் சென்று அங்கே வாழ்கின்றனர்.
          இப்போது நான் காட்டிற்குப் போகவில்லை; என்னுடைய நாட்டிற்குப் போகின்றேன்! சாகப்போகவில்லையப்பா, வாழப் போகின்றேன்! அதுவும் மன்னனாக ஆளப்போகிறேன்! உனக்கு ஒருவேளை அரண்மனைப் படகோட்டி வேலை வேண்டுமென்றால், இந்தப் படகோடு இப்படியே வேலைக்கு சேர்ந்து விடு !'' என்றான் மன்னன்.

ஒரே ஒரு கேள்வியை மட்டும் எடுத்துக் கொள்ளலாம்.

மன்னனின் வெற்றிக்குக் காரணங்கள் யாவை?

பல காரணங்கள் இருந்தாலும் குறிப்பாக இரண்டினைக் கூறலாம்.

ஒன்று : ஐந்து ஆண்டுகளுக்குப் பின் உயிர் வாழவேண்டும்; அதுவும் மன்னனாகவே வாழவேண்டும் என்று முடிவு எடுத்தது.
இரண்டு : அந்த முடிவினை அடைவதற்காக திட்டமிட்டு உழைத்தது!

அந்த மன்னனுடைய வெற்றிக்கு மட்டுமல்ல; நாம் அனைவருமே வெற்றி பெறவேண்டுமென்றால் நமக்குத்தேவை ஒரு இலக்கை நிர்ணயித்தலும் அதற்காக திட்டமிடுதலும், திட்டமிட்ட பின் வெற்றி
பெறும்வரை கடுமையாகவும் புத்திசாலித்தனமாக உழைப்பதுமே!!!!!!!

மனம் மகிழுங்கள்

,நமது மனது எப்படி இருக்கிறதோ அப்படித்தான் அது உலகத்தை உணர்கிறது. மனது உலகத்தை எப்படி உணர்கிறதோ அப்படித்தான் உலகம் நம்மைப் பிரதிபலிக்கிறது.

குழப்புகிறதோ?

ரொம்ப சிம்பிள்.

நீங்கள் உற்சாகமாய், “குட் மூடில்“ இருக்கிறீர்கள் என்றால் நீங்களும் மற்றவர்களிடம் அன்பாய், இனிமையாய், நகைச் சுவையாய்ப் பேசுவீர்கள்.. பதிலுக்கு அவர்களும் உங்களிடம் அப்படியே பிரதிபலிப்பர். நீங்கள் சிரித்து நண்பரின் முதுகைத் தட்டினால் அவர் கத்தி எடுத்துக் கொண்டு உங்களைக் குத்த வரப்போவதில்லை. பதிலுக்கு அவரும் சிரித்தாக வேண்டும். உலகமே அன்று உங்களுக்கு மகிழ்ச்சியாய், இனிதாய்த் தோன்றும்.

நீங்கள் உற்சாகம் குன்றி, வருத்தத்திலும் அழுது வடியும் முகத்துடனும் இருந்தால்? பொறுமைசாலியான நண்பராய் இருந்தால், ஒரு சிங்கிள் டீ வாங்கிக் கொடுத்து உங்கள் சோகக் கதையைக் கேட்டுவிட்டு எஸ்கேப் ஆகலாம். அல்லது, தூரத்திலிருந்தே உங்களைப் பார்த்துவிட்டு ஓடும் பஸ்ஸில் ஃபுட்போர்டில் தாவி ஏறி ஓடிவிடலாம். அதைக் கண்டால் மேலும் சோகம் பெருகி, மேலும் வருத்தப்பட்டு... கஷ்டம்.

நம்மைப் பற்றி நம் மனதிலுள்ள சுயபிம்பம் தான், நாம் எப்படி நடந்துகொள்ளப் போகிறோம் என்பதை நிர்ணயிக்கிறது. அதன் அடிப்படையில் தான் நாம் யாரிடம் பழகப் போகிறோம், என்ன செய்யப் போகிறோம், அல்லது செய்யாமல் இருக்கப் போகிறோம் என்பது நிர்ணயிக்கப்படுகிறது..

சரி, நம்மைப் பற்றிய பிம்பம் நமக்குள் எப்படி உருவாகிறது?

அது நமது அனுபவங்களின் கலவை. நாம் சந்தித்த வெற்றி, தோல்வி, நம்மைப் பற்றி நாம் நினைப்பது, மற்றவர்களைப் பற்றி நம் மனதில் ஏற்படும் அபிப்ராயம், மற்றவர்கள் நம்மிடம் நடந்து கொள்ளும் முறை, இவையெல்லாம் நம்முடைய சுயபிம்பம் உருவாகும் காரணிகள். அதை மனம் நம்புகிறது. அந்த பிம்பத்தின் கட்டுமானததிற்குள்ளேயே நம்முடைய வாழ்க்கையை அது அமைத்துக் கொள்கிறது.

அந்த சுயபிம்பம் தான், இந்த உலகத்தை நாம் எந்தளவு நேசிக்கப் போகிறோம், அதில் வாழ என்னென்ன முயற்சி எடுக்கப் போகிறோம் என்பதையும், நாம் வாழ்க்கையில் எதை சாதிக்கப் போகிறோம் என்பதையும் நிர்ணயிக்கிறது.

நாம் யார் என்று நினைக்கிறோமோ அது தான் நாம்!

அந்த சுயபிம்பம் நம்மை எப்படி வடிவமைகிறதோ அது தான் நாம்!

பள்ளியில், கல்லூரியில் ஏதாவது ஒரு பாடம் படு்த்தியெடுக்கும். ஒருவர் பௌதிகத்தில் வீக்காக இருப்பார். “என்னதான் தலைகீழாக நின்றாலும் இது என் மண்டையில் ஏறாது” என்ற முடிவிற்கே வந்துவிடுவார். ஆரம்பத்தில் ஏதாவது ஒரு பெளதிக விதி சற்றுப் புரியாமல் ஆகி, அதைத் தொடர்ந்து அந்தத் தேர்வில் சற்றுக் குறைந்த மதிப்பெண் பெற்றிருக்கலாம். அதுவே பின்னர் அலர்ஜியாக உருப்பெற்று, ”ம்ஹும்! காப்பி அடிக்கலாமா? பிட்டு அடிக்கலாமா?” என்று குறுக்குவழிக்கு மனம் தயார்பட ஆரம்பித்திருக்கும்.

மனம் மேலும் மேலும் அந்தப் பாடத்தில் அவரைப் பின்தங்க வைக்கும். அப்படியே தப்பித் தவறிச் சற்று நல்ல மதிப்பெண் கிடைத்துவிட்டாலும், ”ஹ! எல்லாம் குருட்டு அதிர்ஷ்டம்” என்று தான் மனம் நம்பும். அடுத்த தேர்வில் தோல்வி வந்தால், ”அதான் அப்பவே தெரியுமே!” என்றுதான் மனம் நிம்மதி அடையும்.

பௌதிகம், உதாரணம் மட்டுமே! வாழ்க்கையில் ஒருவர் இப்படி ஏதாவது ஒரு விஷயத்தில் பின்னடைந்து இருக்கலாம், வீக்காக இருக்கலாம்.

சைக்களில் டபுள்ஸ் அடிக்கும் போது ஒருமுறை விழுந்திருப்பார். அதன் பிறகு தம்மால் டபுள்ஸ் அடிக்க முடியாது என்று முடிவெடுத்து அதையே நம்ப ஆரம்பிப்பார். தாம் மனதளவில் அதைப் பலமாய் நம்புவது மட்டுமில்லாது, பார்ப்பவரிடமெல்லாம் அதைப் பறை சாற்றிககொள்ளவும் செய்வார்.. எதிர் வீட்டு மாமா, அடுத்த வீட்டு வேலைக்காரி, காலையில் பால் சப்ளை செய்பவர் என்று யாரிடமெல்லாம் சகஜமாய்ப் பேசுவாரோ அத்தனைப் பேரிடமும் அவரது பலவீனம் விளம்பரம் ஆகும். எவ்வளவுக்கு எவ்வளவு அவர் அப்படிச் சொல்லிக் கொள்கிறாரோ மற்றவர்களும் அந்த அளவுக்குஅதை நம்ப ஆரம்பித்து விடுகிறார்கள். அதைக் கொண்டு மனம் மேலும் தன்னை அப்படியே நம்ப, அவரது பலவீனமான சுயபிம்பம் வலுவடைந்து விடுகிறது.

இதை மாற்ற, நம்மைப் பற்றிய உயர்ந்த சிந்தனையை வளர்த்துக் கொள்ள வேண்டும்

அதற்கு என்ன செய்யலாம்.

மாத்தியோசி!

நம்முடைய பாஸிட்டிவ் தன்மைகளை உணர்ந்து நம்மால் நம் குறைகளைக் களைந்து முன்னேற முடியும் என்ற தன்னம்பிக்கை முதல்படி. தம்முடைய சக்தியையும் வலிமையையும் உணர்ந்து கொள்ள ஆரம்பித்துவிட்டால், அதுவே ஒருவரை வேகமாய் முன்னேற வைக்கும்.

“என்னதான் ஸ்பின் போட்டால்லும் என்ன? துரத்துகிறேன் பார் அதைப் பவுண்டரிக்கு” என்று நினைத்தால் அதுதான் தன்னம்பிக்கை. அம்பயர் கையை வேகமாய் வலமும் இடமும் ஆட்ட வேண்டியது தான்.

மாறாக “இந்த ஸ்பின்னெல்லாம் தாங்குவேனா” என்று நினைத்தால் அம்பயர் ஒற்றைக் கையின் ஒற்றை விரலை மேலே நீட்டி விடுவார்.

“வர வருமானத்திலே எப்படித் தான் குப்பைக் கொட்டுவதோ” என்று நினைத்தால் மாசா மாசம் பற்றாக்குறை தான்.

“எப்படியும் சமாளிச்சுடலாம்” என்று நினைத்துப் பாருங்களேன். மாயம் நிகழும்.

இது இப்படியிருக்க,

தமது வாழ்க்கையில் ஓரளவு தான் நல்லது நடக்கும் என்று சிலரது மனம் தேவையில்லாமல் ஒரு வரைமுறை வைத்திருக்கும். அவரது வாழ்க்கையில் நல்லதே நடந்து கொண்டிருக்கிறது என்று வையுங்கள், ”அதெப்படி எல்லாமே இவ்ளோ சூப்பரா நமக்கு நடந்து கொண்டிருக்கிறது” என்று அவரது மனம் ஆச்சரியமும், இனந்தெரியா பதட்ட நிலையையும் அடைய, அடுத்து ஏதாவது ஒரு தீயது நிகழலாம்.

“அதானே பார்த்தேன். அப்படி நமக்கு எல்லாமே ஒழுங்கா நடந்துட்டாலும்?” என்று அப்பொழுதுதான் மனம் சமாதானம் அடையும்.

மனதை இன்பமாக வைத்துக் கொள்ள வரைமுறை தேவையில்லை. நம்மை விட வாழ்க்கையில் உயர்ந்தவர்கள் எத்தனைக் கோடி உள்ளார்களோ அதே போல் நமக்கும் கீழே உள்ளவர் கோடி.

எனவே நமது சுயபிம்பத்தை சிறப்பானதாக ஆக்கிக்கொள்ள நமது வாழ்க்கையின் தரம், அமைதி, நோக்கம் இவற்றைத் தரமானதாக ஆக்கிக் கொள்ளவேண்டும்.

இங்கு ஒன்றை மிகக் கவனமாய் மனதில் கொள்ள வேண்டும். நம்மைப் பற்றிய உயர்வான சுயபிம்பம் என்பதற்கும் கர்வம், அகந்தை தலைக்கணம் போன்ற சொற்களுக்கும் உள்ள முக்கியமான வித்தியாசத்தை உணர வேண்டும்.

இல்லையென்றால் என்னாகும்?

தரமான சுயபிம்பம் மனமகிழ்வுடன் நாம் வாழ்க்கையில் உயர வழிவகுக்கும்.