முடியாததை முடிப்பவர்களே முடிசூடிக் கொள்கிறார்கள். முடியக் கூடியதை முடிப்பவர்கள் பாவம் முடிவெட்டிக் கொள்கிறார்கள். உங்கள் சிரம் முடிவெட்டத் தோன்றியதா? முடிசூடத் தோன்றியதா? முடிவெடுக்க வேண்டாவோ?
ஐம்பத்தாறு சமஸ்தானங்கள் ஆளுக்கொரு திசையில் பிய்த்துக் கொள்ள ஆசைப்பட்டபோது அத்தனை பேரையும் அடக்குவது நடக்கிறகாரியமா? முடியாது முடியாது என்று பலரும் நினைத்தபோது ஏன் முடியாது அடக்கிக் காட்டுகிறேன்” என்று அடக்கிய இரும்பு மனிதர் சர்தார் வல்லபாய் படேல். முடியாததை முடித்த முடி மன்னர். நீங்கள் அவரை விட மட்டமா?
எமர்ஜன்ஸி என்கிற இரும்புக் கைகளால் இந்திராகாந்தி இந்தியாவைப் பிசைந்தபோது திராவிட இயக்கமும் சரி, இந்து இயக்கமும் சரி காப்பாற்ற முடியாதபடி கரைந்துபோகும் என்றே எல்லோரும் கணக்குப் போட்டார்கள்.
ஆனால், இரண்டுமே கட்டுக் கோப்பாகக் காப்பாற்றப்பட்டு மாநிலத்திலும் மத்தியிலும் பதவியேற்று வரலாறு படைத்தார்களே எப்படி? எப்படி? சமைந்தது எப்படி என்று பாட்டுப் பாடினால் போதாது. சாவிலிருந்து எழுந்தது எப்படி என்ற சரித்திரம் படிக்க வேண்டும்.
இந்து இயக்கம் திராவிட இயக்கம் ஆகிய இரண்டு இயக்கங்களுமே எதிர் எதிரானவை என்றாலும் சாக மறுக்கும் உயிர் ஆவேசம், முடியாததை முடிக்கும் மனோபாவம் இருவருக்கம் பொதுவானவை. அதனால்தான் சாம்பலிலிருந்து புறப்படும் ஃபினிக்ஸ் பறவைபோல (கற்பனைதான்) சாவிலிருந்து புறப்பட்டவை அந்த இரண்டு இயக்கங்களும்!
ஒரு கோவிலின் மேல் கூரையில் ஓவியம் வரையவேண்டும். உட்கார்ந்தபடியோ நின்றபடியோ அல்ல. படுத்தபடி மேல் கூரையில் வரைவதால் சாரம் கட்டி அதில் படுத்தபடி பலமணி நேரம் வரைய வேண்டும். ஒருநாள் இரு நாள் அல்ல நான்கரை ஆண்டுகள் வரைந்தார் ஒருவர். உங்களால் அப்படி உழைக்கமுடியுமா?
உணவு நேரத்திற்கு உணவு கிடையாது. கொடுமையான பெயிண்ட் வாசனையால் நுரையீரல் கோளாறு ஏற்பட உடல்நலம் கெட எதையுமே பொருட்படுத்தாமல் ஐயாயிரத்து எண்ணூறு சதுர அடி பரப்பளவில் முந்நூற்று நாற்பத்திமூன்று அமர ஓவியங்களை வரைந்து பைபிளை உயிர்ப்பித்த மைக்கல் ஏஞ்சலோதான் அந்த உலகப் புகழ்பெற்ற ஓவியர்.
அவர் வெறும் ஓவியர் மட்டுமல்ல சிற்பி, கட்டடக் கலை வல்லுநர். இடைஇடையே இந்தப் பணிகள் வேறு. முடியாததை முடித்ததால் ஓவியத்தில் முடிசூடிய மன்னர் அவர்.
கல்லே இல்லாத ஊரில் கற்கோவில். கிரேனே இல்லாத போது பல டன் எடையுள்ள கல்லை சாரம் கட்டி உச்சிக்குக் கொண்டுபோன சாதனையாளன். முடியாததை முடித்தவன் ராஜ ராஜ சோழன். அதனால் தான் சோழ அரசர்களின் மணி மகுடம் அவன்.
அடிமையாக இருப்பவர்கள். அடிபடவே பிறந்தவர்கள் என்று நசுக்கப்பட்ட தொழிலாளர்கள் தோளை நிமிர்த்தி பொதுவுடமை என்கிற வாளை நிமிர்த்தி அடிமைச் சங்கிலியை அறுத்தெறிந்து ஆட்சிச் செங்கோலைத் தொழிலாளர் கையில் தந்து உலகம் அதுவரை கண்டிராத ஆட்சிமுறைக்கு வித்திட்டாரே கார்ல மார்க்ஸ். அவரென்ன முடியக் கூடியதை முடித்தவரா? முடியாததை முடித்தவரா? யோசியுங்கள். யோசியுங்கள்.
கடல் வழிப் பயணம் ஒரு கனவாக இருந்த காலத்தில் நனவாக்கும் வெறியில் புறப்பட்டார் கொலம்பஸ். பக்கத் துணையாகப் பயணிகள் வரவில்லை. கொள்ளையர்களும் குற்றாவளிகளும் அனுப்பப்பட்டனர்.
பாதி வழியில் பிரச்சனை பிறந்தது. உணவுப் பொருட்களைப் பாதுகாத்து வந்த ரொனால்ட் என்பவன் அதிர்ச்சியை அறிவித்தான். கைவசம் உள்ள உணவு ஊர் திரும்ப மட்டுமே போதுமானது. மேற்கொண்டு பயணம் தொடர்ந்தால் ஒவ்வொரு நாளும் திரும்புவதற்கான உணவு தீர்ந்து போவதால் கப்பலைத் திருப்புவோம். புறப்பட்ட இடமே போய்ச் சேருவோம் என்றான்.
உடனிருந்த மாலுமிகள் ஆம் ஆம் என்றனர். கொலம்பஸின் கப்பல் கவிழவில்லை. கப்பல் பயண லட்சியம் கவிழ ஆரம்பித்தது. கொலம்பஸின் கூற்று அவர்கள் பய மண்டையில் ஏறவே இல்லை. கொலம்பஸ் கைதானார். ரொனால்ட் தலைமை ஏற்றான். கொலம்பஸ் அசரவில்லை.
ஒரு புதுக் கணக்கு சொன்னார். திரும்பும் நாட்களில் தமக்கென்று உள்ள மொத்த உணவை மற்றவர் எல்லோரும் பங்கிட்டுக் கொள்ளலாம். பட்டினி கிடக்க தான் தயார். அந்த உணவு துணைகொண்டு ஒரு நாளோ இரு நாளோ திட்டமிட்டபடி மேலே பயணம் தொடர்வோம். திரும்ப வேண்டாம் என்று கெஞ்சினார்.
அது நியாயமாகப்பட்டது. பயணம் தொடர்ந்தது. அடுத்த இருபத்தி நாலு மணி நேரத்துக்குள் அமெரிக்கக் கடற்கரை அவர்களுக்குத் தட்டுப்பட்டது. உணவைக் கருதி திரும்பி இருந்தால், கொலம்பஸ் உலகப் புகழ் வெறும் புஸ். முடியாததை முடித்தார். முடிசூடிக் கொண்டார்.
முடியாததை முடிக்கவே நாம் பிறந்திருக்கிறோம். முடிவதை முடிப்பதற்கு அல்ல!
No comments:
Post a Comment